Wednesday, July 22, 2020

ஹயக்ரீவர் - வராஹமித்ரர் (5)

  "ஹயக்ரீவ முபாஸ்மஹே"



           மதுகைடபன் எனும் அசுரர்கள் படைக்கும் கடவுளான பிரம்மாவிடமிருந்த வேதங்களை பறித்துக் கொண்டனர். அத்துடன் பாதாள உலகத்திற்குச் சென்றனர். அதனை மீட்டுத் தரும்படி பிரம்மா, காக்கும் கடவுளான விஷ்ணுவை வேண்டினார். மதுவும், கைடபனும் படைக்கும் தொழிலை செய்ய ஆசை கொண்டனர். அவர்கள் குதிரை முகம் உடையவர்கள் என்பதால் விஷ்ணுஅவர்களுடன் போர் புரிந்தார். அசுரர்களுடன் போரிட்டு வேதங்களை மீட்டு பிரம்மனிடம் தந்தார். 


        இருவரையும் வதைத்த பின்னர் மேலும் பல அசுரர்களோடு, ஆயிரக்கணக்கான முறை போரிட்டு அவர்களையெல்லாம் கொன்றார். இதனால் அவர்களைப்புற்றார்.
மிகவும் சோர்வுடன் பத்மாசனத்தில் அமர்ந்தவாரே, நாண் பூட்டிய தனது வில்லை பூமியில் ஊன்றி, கழுத்தை அதன் மீது சாய்த்து ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்தார். 


             திருமால் இவ்வாறு திடீரென்று தூக்கம் கொண்டபோது உலகமே செயலிழந்து போனது! தேவர்கள் கதி கலங்கி பிரம்மாவும், சிவனும் சேர்ந்து திருமாலின் தூக்கத்தை எப்படியேனும் கலைத்து அவரைத் துயிலெழச் செய்ய வேண்டுமென்று வேண்டினர். பிரம்மனால் படைக்கப்பட்ட பூச்சி இனங்களில் ஒன்றான கரையான் பூச்சி அந்த ஊன்றப்பட்ட வில்லின் நாண் நுனியினைக் கடித்து அரித்தால், நாண் அறுந்த அந்த ஓசையில் இறைவன் துயிலெழுந்து விடுவார் என்று அவர்கள் எதிர்பார்த்தனர்.

          பிரம்மாவின் கட்டளைப்படி கரையான்கள் ஒன்று திரண்டு வில்லின் நுனியை அரிக்கத் தொடங்கின. பேரொலியேடு நாண் அறுந்தது. அதே வேகத்தில் வில் திருமாலின் தலையை வெட்டி துண்டித்து விட்டது. இதைப் பார்த்து எல்லோரும் திடுக்கிட்டு போனார்கள்.
ஒருமுறை மகாவிஷ்ணு, லட்சுமியின் முகத்தைப் பார்த்து கேலி செய்ய, தேவியோ கோபம் அடைந்து தன்னைப் பரிகாசம் செய்த இறைவனின் தலை ஒரு சந்தர்ப்பதில் அறுந்து விழக் கடவது என்று சாபமிட்டாளாம். இந்த சாபத்தின்படியே திருமாலின் தலை அறுந்து போயிற்றாம்.

             இதே நேரத்தில் சரஸ்வதி நதிக்கரையில் குதிரைத் தலையுடன் கூடிய ஹயக்ரீவன் என்ற அசுரன் ஒருவன் தேவி பராசக்தியை நோக்கி தவம் புரிந்து வந்தான். தேவி அவனுக்கு காட்சி அளித்தபோது, குதிரை முகம் படைத்த ஒருவனால் மட்டுமே தனக்கு மரணம் சம்பவிக்க வேண்டும் என்ற வரத்தைக் கேட்டுப் பெற்றான். பிறகு அனைத்து தேவர்களையும் துன்புறுத்தத் தொடங்கினான்.

        இதற்கிடையே பிரம்மாவும் இதர தேவர்களும் திருமாலின் உடலில் வேறு ஒரு பொருத்தமான தலையை கண்டுபிடித்து பொருத்துமாறு தேவ சிற்பியான துவஷ்டாவை வேண்டினர். துவஷ்டாவும் ஓர் அழகிய ஆண் குதிரையின் தலையை வெட்டி கொண்டு வந்து திருமாலின் கழுத்தில் பொருத்தினார். இதன் மூலம் குதிரைத் தலையுடன் கூடிய ஸ்ரீஹயக்ரீவர் அவதாரம் எடுத்தார்.


      ஸ்ரீஹயக்ரீவர் இந்திரனையும், தேவர்களையும் துன்புறுத்தி வந்த ஹயக்ரீ வாசுரனை வதம் செய்தார்.

                 ஸ்ரீ ஹயக்ரீவ அவதாரம் திருமாலின் பதினெட்டாவது அவதாரமாகக் கருதப்படுகிறது. பின் வலக்கரத்தில் ஸ்ரீ சுதர்சன சக்கரத்தையும், இடக்கரத்தில் பாஞ்ச ஜன்யம் என்ற சங்கையும், முன் வலது கரத்தில் ஏடையும் ஏந்தி மக்களுக்கு ஞானத்தை போதிக்கும் ஞான சொரூபியாக ஸ்ரீஹயக்ரீவர் திகழ்கிறார்.




         அவரது உக்கிரகத்தைத் தணிக்க, அன்னை லஷ்மி அருகில் வர ஆனந்தமடைந்தார் ஹயக்ரீவர். தனது மடியில் மகாலஷ்மியை அமர்த்திக் கொண்டதால், லஷ்மி ஹயக்ரீவர் என்று அழைக்கப்பட்டார். வேதத்தை மீட்ட பெருமாள் ஆனதால் இவரைத் துதித்தால் கல்வி கேள்விகளில் சிறக்கலாம் என்பது ஐதீகம்.

      புதனின் அதிதேவதை விஷ்ணு பகவானாவார். அசுரர்களிடமிருந்து வேதத்தை காக்க மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களில் ஸ்ரீ ஹயக்ரீவர் அவதாரம் குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ லட்சுமி ஹயக்ரிவர் கல்விக்கதிபதியான சரஸ்வதியின் குரு என புராணங்கள் போற்றுகின்றன. ஸ்ரீ லட்சுமி ஹயக்ரிவ மூர்த்தியை வணங்குவதன் மூலம் கல்வியறிவையும் பெருக்குவதோடு புத்திக்கூர்மையையும் அதிகரிக்கும். கல்வித்தடை நீங்கும்.

           அறியாமை எனும் இருளில் இருந்து ஞானம் எனும் ஒளியை நோக்கி அழைத்து செல்லும் ஞான ஆசிரியனாக ஹயக்ரீவர் அருள்புரிகிறார்.கல்விச் செல்வத்தோடு சேர்த்து பொருள் செல்வத்தை வழங்கும் விதமாக சில தலங்களில் தனது மடியில் லட்சுமி தேவியுடன் இவர் அருள்புரிகிறார். இந்த வடிவம் ‘லட்சுமி ஹயக்ரீவர்' எனப்படுகிறது. கல்வியிலும் இசை, நடனம் போன்ற கலைகளிலும் சிறந்து விளங்குவதற்கு ஞானத்தின் இருப்பிடமாக விளங்கும் ஹயக்ரீவரை வணங்கலாம்.

      ஸ்ரீஹயக்ரீவரின் வாய் சற்றுத் திறந்தது போல அமைக்கப்பட்டிருக்கிறது. இது அவர் எப்போதும் பிரணவ மந்திரமான ஓம் என்பதை எப்போதும் ஜெபித்துக் கொண்டிருப்பதை காட்டுகிறது. அசுரன் ஹயக்ரீவன் நான்கு வேதங்களையும் கடலுக்குள் கொண்டு சென்று ஒளித்து வைத்த போது, ஸ்ரீஹயக்ரீவர் அவனைக் கொன்று வேதங்களை மீட்டு வந்து வேத சொரூபமாக விளங்குகிறார். அவித்யையும், அஞ்ஞானத்தையும் அகற்றும் சந்திரனின் அழகிய ஒளிபோல ஸ்ரீஹயக்ரீவர் விளங்குவதால், அவர் சந்திரப் பிரபையில் அமைந்துள்ளது போல சித்திரிக்கப்படுகிறார்.




              கி.பி. 1480 ஆண்டு காலத்தில் வாழ்ந்த மத்வ குருவான மகான் ஸ்ரீவாதிராஜர், ஹயக்ரீவரை உபாசனைத் தெய்வமாகக் கொண்டவர். அவர் தினமும் ஹயக்ரீவருக்கு படைக்கும் பிரசாதத்தை ஹயக்ரீவரே வந்து உண்பாராம்.

      படிப்பில் சற்று மந்தமாக இருப்பவர்கள், ஞாபக சக்தி குறைவாக உள்ளவர்கள், பேச்சு சரியாக வராதவர்கள் இவரை வணங்கினால் சகல குறைகளும் நீங்கி ஞானம் அதிகரிக்கும். செல்வாக்குடன் சொல்வாக்கும் நிறைந்த வக்கீல்கள், விற்பனை பிரதிநிதிகள், புரோகிதர்கள், ஜோதிடர்கள், ஆசிரியர்கள், பேச்சாளர்கள், கவிஞர்கள் ஆகியோர் ஹயக்ரீவரை வணங்கி வழிபட்டால் தடைகள், தடங்கல்கள் நீங்கி தொழில் சுபிட்சமாக நடக்கும்.

           

No comments:

Post a Comment